Thursday, October 31, 2019

இப்படிக்கு சுர்ஜித்தின் தாய்

சோளக் காட்டுக்குள்ள
விளையாட போனவனே
இப்படி
சோகம் வந்து சேருமெனு
கொஞ்சம் கூட நெனக்கலையே...

மண்ணாள வந்தவனு
காணா கண்டு இருந்தேனே
இப்படி
மண்ணு கொண்டு போகுமுனு
கனவில் கூட நெனக்லையே..

பொத்தி பொத்தி வளத்த மகன்
என்ன பாடு பட்டானோ
ஆடி அசைந்து நடந்த மகன்
அசைய முடியா தவிச்சானோ

எத்தனை எத்தனை முயற்சிகள்
பண்ணி பார்த்தோமடா
எத்தனை எத்தனை கருவிகள்
பொருத்தி பார்த்தோமடா
எத்தனை எத்தனை பிரார்த்தனை அர்ச்சனைகள்
செய்து கொண்டோமடா
அத்தனைக்கும் அத்தனைக்கும்
இயற்கை செவி சாய்க்கலடா..

பவுடர் பூசி பார்த்த மகன்
பளிங்கு கல்லாய் ஜொலிச்ச மகன்
அழுதா கூட என் அழகு மகன்
அழுகும் நிலையில் பார்த்தவுடன் அய்யய்யோ மனம் தாங்கலையே..

மீண்டு வருவானு நினைச்சிருந்தேன்
இப்படி
மாண்டு மண்ணாவானு நெனக்கலையே..
மீண்டும் மீண்டும் வருகிறாய் எங்கள் கனவில்
மீளா துயரில் தமிழகம்  தான் அவன் நினைவில்..

தண்ணீருக்காக தோண்டி வச்சோம்
மூட வழியில்லா கிடப்பில் வச்சோம்
அது தவறு தெரிஞ்சும் மறைக்க மறந்தோம்
அந்த தவற நீ தமிழகம் உரைக்க தவறி விழுந்தாயோ
இப்போ
சுர்ஜித் எங்க மொத்த மகிழ்ச்சியையும் மண்ணுகுள்ள கொண்டு சேர்த்துகிட்டான்..

இனி இதுபோன்ற நிகழ்வு வேண்டாமே
முதலும் இறுதியுமாய் என் மகன் உயிர்ப்பலி அதை சொல்லிடுமே..

Saturday, October 26, 2019

தமிழ் கீதம்

கல்-மண்-புல்-முன்தோன்றிய தமிழே   
உலகத்து-தாய்மொழி-தமிழே 
குமரிக்கண்டம் கடல்மலை கடந்து   
உலகமே வியந்திட்ட தமிழே 
கம்பன் வள்ளுவன் இளங்கோ அவ்வை
கைகளில் தவழ்ந்திட்ட தமிழே
ஈரடி சொல்லும் தமிழே 
கீழடி சொல்லிடும் தமிழே
அமுதே திகட்டாத தமிழே
உலகென்ன உயிரென்ன பரவிய தமிழே
வானத்து புகழ்கொண்ட தமிழே
(Jaya he, Jaya he, Jaya he,)
தமிழே தமிழே தமிழே
(jaya jaya jaya jaya he )
வாழ்க வளர்க செந்தமிழே 

Thursday, October 24, 2019

காதல் பாடல்#55

சுட்டும் விழியால
என்னை சுண்டி இழுக்குற
கன்னக் குழியிலதான்
அதை மூடி மறைக்குற
என்ன உன்கிட்டதான் தேடிதேடி வாரேன் புள்ள
நானே நீயாகதான் சுத்துரேண்டி ஊருக்குள்ள
சம்மதம் சொல்லு புள்ள
சகலமும் நீதானே
சரணம்
********
நாலு கண்ணால
தாலி கட்டி முடிக்கனும்.
அஞ்சு ஆறுனு
நாம பெத்து சுமக்கனும்.
ஊரே மெச்சுர வகையில் வாழ்ந்துதான் பார்க்கனும்
இணைப்பிரியாத ஜோடி  நாமென்று உலகம் சொல்ல கேட்கனும்..
சம்மதம் சொல்லு புள்ள
சகலமும் நீதானே
சரணம்
********
காலம் இறுதிவரை
நம்முள் காதல் பெருகனும்
கண்ணே மணியேனு
எப்பவும் கொஞ்சி மகிழனும்.
பொதுவா நடந்து போகையில வழித்துணையா இருக்கனும்.
இடைவிடாமல் கூடி இடைவெளி வராது நாமும் வாழனும்..
சம்மதம் சொல்லு புள்ள
சகலமும் நீதானே

Friday, October 18, 2019

தந்தையின் தாலாட்டு பாட்டு

ஆராரோ ஆரிரரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிரரோ ஆரிராரோ
நான் பாராட்ட பாடும் பாட்டு
செல்லமே பாரு
நான் தாலாட்ட தாயும் ஆனேன்
தங்கமே கேளு
நான் இருக்க ஏன் அழுற
வான் மேகம் அதும் தாண்டி
தேடி தேடி தமிழெடுத்து
அப்பன் நான் பாட்டெழுத
கண்கள் மூடி நீயும் கண்ணே
கண்ணுறங்கு கண்ணுறங்கு..

சரணம்
*********
கட்டிவச்ச முத்துசரம் நீ கட்டவிழ்க விசித்திரம் நீ
கொட்டிவைச்ச புதையல் நீ
எட்டிவைக்க புவியியல் நீ
தட்டிவைச்ச உள்ளம் முழுதும் நீ
பட்டிதொட்டி கிட்டாத செல்வம் நீ
என்னால நீ உருவாக
உன்னால நான் மீண்டும் கருவானேனே..
எதுவாக இருந்தாலும் எதற்காகவும் கலங்காதே
அப்பன் நான் துணை இருக்க
கண்கள் மூடி நீயும் கண்ணே
கண்ணுறங்கு கண்ணுறங்கு..

Tuesday, October 15, 2019

கலாம் அய்யா

கனவு தலைவா கனவு காண்கிறோம்
உந்தன் எந்தன் கனவுகளையும் நனவாக்க...

நீ பிறந்த இந்த மண்ணில்
நாங்கள் பிறந்ததே வாழ்வதே பெருமை...

மெய்ஞானத்தை பிறப்பிடமாக கொண்டு
விஞ்ஞானத்தை கண்டு மெய் மறந்து சிலிர்க்க வைத்தீர்...

நீர் இம்மண்ணில் விழுந்தாலும்
உந்தன் சொல்லில் விழுந்தவர்கள் நாங்கள்
இதோ விதைக்கின்றோம் செடிகளை
எங்களுடன் முளைத்து வருவார்கள்
வருங்கால பல கலாம்கள்...

படிப்பே தரும் உயர்வு உணர்த்தியது கலாம்
பதவிக்கும் தந்தது உயர்வு அதுதான் கலாம்
பள்ளி பிள்ளைகளுக்கு பாசமிகு கலாம்
பண்பின் உருவம் அவரே கலாம்

காலம் உள்ளளவும் கலாம் அய்யா
எங்கள் உள்ளம் நீங்காது இருப்பீர்...

Tuesday, October 1, 2019

ஒரு பக்க க(வி)தை#10

நதிக்கரையில் அமர்ந்த படி நான்
இருள் சூழ்ந்து கும்மி அடித்துக் கொண்டிருந்தது.

நிலவு மேலே உலவி கொண்டிருந்தது..
ஏ நிலவே என்ன செய்கிறாய் என்றேன்?
முகிலோடு உறவாடி கொண்டிருக்கிறேன் என்றது.

காற்றை உணர்ந்து
ஏ காற்றே என்ன செய்து கொண்டிருக்கிறாய் என வினவினேன்?
காற்றோ வெற்றிடத்தை நிரப்பி கொண்டிருக்கிறேன் என்றது.

எங்கோ ஒளிரும் நெருப்போ
இருக்கும் இருளை விலக்க முயற்சித்து உறவாடி கொண்டிருந்தது.

மண்ணுக்கோ விண் கண்ணடித்து
தூது விடுத்து கொண்டிருந்தது.

ஓடும் நதியை பார்த்து கேட்டேன் என்ன செய்கிறாய் என்று?
நான் கடலிடம் சென்று உறவாட போய் கொண்டிருக்கின்றேன் என்று சொன்னது.

இப்படி

என்னை சுற்றி காண்பவை எல்லாம்
உறவாடி கொண்டிருக்க

உறவாய் நினைத்த என்னவள்
என்னை விட்டுச் சென்றதால்

நதிக்கரை ஓரத்தில்
தனிமையில் நான்..!

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...